ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லா இருந்தபோது, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநிலக் கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் 43.69 கோடி ரூபாய் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச் செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் (ஜே.கே.சி.ஏ) பணமோசடி வழக்கு தொடர்பாக தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபாரூக் அப்துல்லாவின் 11.86 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணைக்கப்பட்ட சொத்துக்களில் இரண்டு குடியிருப்பு மற்றும் ஒரு வணிக சொத்துக்கள் மற்றும் மூன்று நிலங்கள் அடங்கும். இந்த சொத்துக்களில் சந்தை மதிப்பு 60 முதல் 70 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







