புதுவகை கொரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்த ஊரடங்கு படிப்படியாக மாதம் தோறும் பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. எனினும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எனவே, தமிழக்தில் அதன் தாக்கம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு நீடிக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகும் என்றும் தெரிகிறது.
இதனிடையே நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறினார்.







