ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் இகோர் மாடோவிக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த வைரஸ் தொற்று பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள், உலக தலைவர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இதுவரை இந்த நோயால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் பொல்செனேரோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் இகோர் மாடோவிக்கும் இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நான் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை மருத்துவமனையில் கழிக்க வேண்டியிருக்கும், எனது திட்டங்கள் தற்போது வித்தியாசமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். ஸ்லோவாக்கியா பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் தான் பிரான்ஸ் அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்பப்படும் நிலையில் தற்போது அதே மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்லோவாக்கியா பிரதமரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.