ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற ஊரில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களில் வாந்தி மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதவாரி மாவட்டத்தில் ஏலூரு என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் பொதுமக்களில் 270க்கும் மேற்பட்டோர் கடந்த 2 தினங்களில் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், எஞ்சியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே பாதிப்பு குறித்து கண்டறிய மருத்து நிபுணர் குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மருத்து குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







