ஆந்திர பிரதேசத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் அதிகம் காணப்படுவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரு பகுதி மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் விநோத சத்தம் எழுப்புவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதற்காக தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியில் அதிக அளவு ஈயம் மற்றும் நிக்கல் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களது ரத்த மாதிரிகள் டெல்லி AIIMS-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் அதிக அளவில் கலந்துள்ளதற்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தண்ணீர் மற்றும் பாலை பரிசோதனை செய்த போது அதில் பிரச்சனை ஏதும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே எலூருவில் மர்ம நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.