உயிருள்ளவரை இனி அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்தி வந்த தமிழருவி மணியன், ரஜினி தொடங்கப் போவதாக கூறியிருந்த கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். கட்சியை தொடங்கும் வேலைகளில் தமிழருவி மணியன் முழுவீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கல்லூரி பருவத்தில் காமராஜர் காலடியில் தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதாகவும், 50 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட தமது அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது என்றும் கூறியுள்ளார். அரசியலில் ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் எள்ளவும் மதிப்பில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், தாம் ஒருபோதும் அறத்திற்கு புறம்பாக வாழ்ந்ததில்லை என்றும் எவரிடத்திலும், எந்தநிலையிலும் கையேந்தியதில்லை என்றும் கூறியுள்ளார். மக்கள் நலன் சார்ந்தர மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சித்ததுதான் தாம் செய்த ஒரே குற்றம் என்றும் தமிழருவி மணியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதற்காக தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் தன் மீது வீசப்படுவதால் தனது மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கத்திற்கும், கூழாங்கற்களுக்கும் வித்தியாசம் பேதம் தெரியாத, அரசியல் உலகில் இனி தான் சாதிக்க ஒன்றும் இல்லை எனக் கூறியுள்ள தமிழருவி மணியன், இறப்புத் தம்மை தழுவும் இறுதிநாள் வரை தான் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். திமுகவிலிருந்து விலகும்போது போய் வருகிறேன் என கண்ணதாசன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள தமிழருவி மணியன், தாம் அரசியலைவிட்டு போகிறேன் ஆனால் வரமாட்டேன் என்றும் உருக்கமாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்.