ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைன் பேரழிவை சந்தித்து வருவதாக அதன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ரஷ்ய ராணுவத்தால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷ்யா நடத்தி வரும் ஷெல் தாக்குதலால், அந்த நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு விரைவாக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும், ராக்கெட் லாஞ்சர்ஸ், டாங்குகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகம் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
டான்போஸ் பிராந்தியத்தின் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்திருப்பதாகக் கூறும் உக்ரைன், அனைத்து விதமான ஆயுதங்களையும் கொண்டு பிராந்தியத்தின் 4 நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதேபோல், லுகான்ஸ்க் பிராந்தியத்திலும் நிலைமை மோசமடைந்திருப்பதாக அதன் ஆளுநர் செர்கி கைடை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் நிலைமை மோசடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் காரணமாக உக்ரைனில் உள்நாட்டுக்குள் 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ள நிலையில், சுமார் 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.