பப்ஜி மதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாக வும் தகவல் வெளியானது. விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்து மீறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை தேடி வந்தனர். தலைமறைவான அவரை, தருமபுரியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
பெண்களை துன்புறுத்தியது உள்ளிட்ட எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று மதன் தரப்பில் கூறப்பட்டது. விசாரணை முழுமையாக முடிவடையவில்லை, பலர் நபர்களிடம் மதன் மோசடி செய்துள்ளார். அதனை முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி அவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







