ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகளிருக்கு ரூ.2000 உதவித் தொகை அறிவித்த நிலையில் பாஜக ரூ.2100 வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள், வேட்பாளர் பட்டியல் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது.

இவற்றில் மிக முக்கியமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம், காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின்படி, ரூ.25 லட்சம் மதிப்பில் இலவச சிகிச்சை, வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகள் உள்ளிட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து இன்று பாஜக தேர்தல அறிக்கையை வெளியிட்டது. மத்திய அமைச்சரும் பாஜக-வின் தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஹரியானா மாநில தற்போதைய முதலமைச்சர் சைனி, பாஜக மாநில தலைவர் மோகன் லால் படோனி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னாள் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், லாடோ லட்சுமி திட்டத்தின்கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2100 உதவித்தொகை, 10 தொழில் நகரங்கள் அமைக்கப்படும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதேபோல நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியிலும் ஓபிசி, எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஹரியானா மாணவர்கள் கல்வி பயில்வதாக இருந்தால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மகளிருக்கு ரூ.2000 உதவி அறிவித்த நிலையில் பாஜக ரூ.100 அதிகரித்து ரூ.2100 ஆக வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.







