தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதில் விருப்பமுள்ள பட்டதாரிகள், இணையம் வழியாக ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு 1,45,709 பேரும், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40,901 பேரும் என 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் விண்ணப்பித்தனர். காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத காலிப் பணியிடங்களுக்கு 6,101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் தேர்வு நடைபெறுகிறது. பொது குழுவினருக்காக தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களிலும், காவல்துறை சார்ந்த நபர்களுக்காக 12 மையங்களிலும் தேர்வு நடக்கிறது. இன்று பொது பிரிவினருக்கு தேர்வு நடைபெறுகிறது. நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. காலையில் மெயின் தேர்வும், பிற்பகலில் தமிழ் தகுதித் தேர்வும் நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்குள் வந்துவிட வேண்டும். பின்னர் 9 மணியிலிருந்து நுழைவுச்சீட்டுடன், ஏதாவது ஒரு அரசின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், எலக்ட்ரானிக் சாதனம் எதுவும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு காலை 10:00மணி முதல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:10 மணி வரையும் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் SBOA பள்ளி, SRM பல்கலைக்கழகம், வேலம்மாள் கல்லூரி சூரப்பட்டு, குருநானக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், எம் ஜி ஆர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
சென்னையில் மொத்தம் 7600 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1500 தேர்வர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்காக 110 காவலர்களை கொண்டு 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







