மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்த 60 க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்வண்டி மூலமாக வந்துள்ளனர். இந்த பெட்டி மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 5 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தீயணைப்புக் குழுவினரும் அப்பகுதியில் குவிந்தனர். பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்காக சிலிண்டர் கொண்டுவந்துள்ளார்கள். சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிகளிலின் மூலம் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் ரயில் பெட்டிகளில் பயணிகள் கொண்டு வந்துள்ள சிலிண்டர் அதிகளவில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்னர். மேலும், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
ரயில்வே விதிகளின்படி, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது. குறிப்பாக, தீப்பெட்டி, பட்டாசுகள் போன்றவைக்கே அனுமதி இல்லாத நிலையில், பயணிகள் எப்படி சிலிண்டரை பயணத்தின் போது எடுத்து வந்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சரியான சோதனைகள் இல்லாதது இதுபோன்ற கோர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைவதாக கூறப்படுகிறது.







