ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில், தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். போலீசார் மீது தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமத்ராம் என்பவர், நேற்று இரவு லோடு ஏற்றிக் கொண்டிருக்கும்போது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உயிரிழப்புக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து ஆலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மொடக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தீபா உட்பட 8-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், உதவி காவல் கண்காணிப்பாளர் பயன்படுத்தும் வாகனம் உட்பட 5-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதனிடையே போலீசார் மீது தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளாது. தொழிலாளர்களின் தாக்குதலை கட்டுப்படுத்த இயலாமல் அங்குள்ள அறைக்குள் போலீசார் மறையும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயுதங்களுடன் தொழிலாளர்கள் போலீசாரை துரத்தும் சிசிடிவி காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.