மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நமது பெண்கள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று, இந்தியா கிரிக்கெட் உலகை ஆழ்கிறது. இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம் இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது திறமை, மன உறுதியின் அற்புதமான வெளிப்பாடு.
இந்த வெற்றி, தலைமுறை தலைமுறையாகப் பல இளம் வீராங்கனைகள் பெரிய கனவுகளைக் காணவும், துணிச்சலுடன் விளையாடவும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.







