புலி, தலையை கவ்வி இழுந்த நிலையில், அரிவாளால் அதை தாக்கிய உயிர் தப்பிய துணிச்சல் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தாராகண்ட் மாநிலம் குமாவுன் கோட்டம் ஹல்த்வானி அருகில் உள்ள ஜவஹர் ஜோதி தமவுதுங்கா பகுதியைச் சேர்ந்தவர் லீலா லட்வால் (45). இவர், வழக்கம் போல காட்டுப்பகுதியில் புல்லறுக்க சென்றிருந்தார். அவருடன் சென்ற மற்றப் பெண்கள் கொஞ்சம் தூரத்தில் அறுத்துக் கொண்டிருந்தனர். லீலா புல்லறுத்துக் கொண்டிருந்தபோது, தன்னை நோக்கி ஏதோ விலங்கு ஒன்று வருவதை உணர்ந்து சுதாரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், அதற்குள் அவர் மீது பாய்ந்த புலி ஒன்று, பலமாக அவர் தோளில் தாக்கியது. பின்னர் தலையை கவ்வி இழுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத லீலா, அதிர்ச்சி அடைந்து விழுந்தார். ஆனால், அவர் கையில் இருந்த அரிவாளை விடவில்லை. அரிவாளால் புலியின் மண்டையில் தாக்கினார். ஆனால், புலி, தோளில் கால் நகங்களால் பலமாக அழுத்தியது. இருந்தும் துணிச்சலுடன் இருந்த லீலா, அரிவாளால் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தார். கூடவே காப்பாத்துங்க என்று கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் ஓடிவந்தனர்.
இந்நிலையில் புலி அங்கிருந்த குகைக்குள் அவரை இழுத்துச் செல்ல முயன்றது. ஆனால், திடீரென அவரை விட்டுவிட்டு ஓடியது. பின்னர் அந்தப் பெண்கள் லீலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 30 தையல் போடப்பட்டுள்ளதாகவும் தோளில் மட்டும் 10 தையல் போடப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி லீலா கூறும்போது, ‘என்னை தாக்கிய புலி, நான் மயங்கிவிட்டதாக நினைத்து குகைக்குள் ஓடியது. பிறகு வந்து என்னை உள்ளே இழுத்துச் செல்லலாம் என அது நினைத்திருக்கலாம். ஆனால், நான் எழுந்து நின்று அரிவாள் மற்றும் கற்களால் அந்த புலியை எதிர்கொள்ள தயாராக இருந்தேன். அதற்குள் மற்றவர்களும் வந்ததால், புலி ஓடிவிட்டது’ என்றார்.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, அனுமதியின்றி அந்ப்த பெண் காட்டுக்குள் சென்று புல்லறுத்துள்ளார். அங்கு செல்லக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் சென்றதால், இழப்பீடு ஏதும் அவருக்கு வழங்க இயலாது. மருத்துவச் செலவுக்கு வேண்டுமானால் உதவலாம்’ என்றனர்.