இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார். ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ் வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது காதல் படம் அல்ல காதலை பற்றிய படம். இப்படத்தில் ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பிக்கிறது. பிறகு அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இந்த சமூகத்தில் காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை . இப்போ காதலை ஒரு அரசியல் சொல்லாக மாற்றி வைத்து இருக்கிறது. அதை பற்றி விவாதிக்க போகும் படம்தான் நட்சத்திரம் நகர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆண், பெண் காதல்கள் மட்டுமல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப் பற்றியும் பேசுகிறோம். புதுச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்க கூடும் நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல் காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நன்றாக வந்திருக்கிறது” என்று கூறினார்.
இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா ? என்கிற கேள்விக்கு, “எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூரமாக நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்யமுடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கமாக இருக்கும் . அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது.ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான். என்றார். “நட்சத்திரம் நகர்கிறது ” படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறினார்.