ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் UPSC, TNPSC தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தமிழக ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன், நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். திமுகவின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து நிற்க வைக்கிறோம். அவரை வெற்றிகொண்ட பிறகு பேசுங்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இன்று பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என தெரியவில்லை. ஆளுநர் தேர்தலில் நிற்க முடியுமா?
நான் கேட்கிறேன், ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிடச் சொல்லும் உதயநிதியால், UPSC, TNPSC குரூப் 4 தேர்வெழுத முடியுமா? திமுகவில் உள்ள சீனியர்கள் உதயநிதிக்கு அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித் தர வேண்டும். உதயநிதி எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டப்படி நீட் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. அதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. அனைத்து மாநிலத்தையும் ஒப்பிடும்போது தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழகத்தின் அரசியல் நிலை மாறி வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.







