மலேசிய நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் வயது வரம்பு 45ஆக உள்ளதை மாற்றி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் தெரிவித்துள்ளார்.
மலேசிய நாட்டில் தொழிலதிபராக உள்ளவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டத்தோ
பிரகதீஷ் குமார். இவரது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோ
ஹம்சாபின் ஜெய்னுதீன் வருகை தந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் வந்துள்ளதாகவும், நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும், சந்திப்பிற்கு பிறகு தாம் அவரோடு நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து மலேசிய நாட்டிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 45ஆக வைத்திருப்பது குறித்த கேள்விக்கு, சுறுசுறுப்புடன் மலேசிய நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வயது வரம்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை மாற்றி அமைப்பது குறித்து மலேசிய நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.
50,000 அமெரிக்கன் டாலர் முதலீடு இருந்தால் மலேசியாவில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக மலேசியா வரலாம் என்றும் தெரிவித்தார்.
மலேசிய நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு ’இன்வெஸ்ட்மென்ட் விசா’ என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், தகுதியானவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குப் பிறகு மலேசிய நாட்டின் சுற்றுலாத்துறை மந்த நிலையில் இருப்பதாகக் கூறிய அவர், அதனை சரி செய்ய மிகக் குறுகிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.