ஜார்ஜியா நீதிமன்றத்தில் வரும் வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைவேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். எனினும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து சுமத்தி வந்தார். தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து திருடிக்கொண்டதாக டிரம்ப் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. எனினும், அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஏற்கெனவே, இது தொடர்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது.
இந்நிலையில், தங்கள் மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது. இத்துடன், நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, குற்றவியல் தண்டனைக்குள்பட்ட, 4-வது பகுதி குற்றச்சாட்டுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை ஃபுல்டன் மாவட்ட நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது 41 குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டிரம்ப், “நான் வியாழன் அன்று ஜார்ஜியா நீதிமன்றத்தில் சரணடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.