தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு தமிழ்நாடு அரசு பதில் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள், நேர்காணல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் சில சந்தேகங்களை எழுப்பி ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அதனை திருப்பி அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், விளக்கத்தை விரிவாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.







