பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்றுதான் பாடல் எழுத வேண்டுமா? என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மருது, தேவராட்டம், குட்டிப்புலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள முத்தையா இயக்கியிருக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடலை கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜாவும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடியிருக்கின்றனர். யூ-டியூப்பில் 3 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட பாடலாக இந்தப் பாடல் திகழ்கிறது.
இந்நிலையில், இந்தப் பாடலில் கஞ்சா பூ என எழுதியிருப்பது ஏன் என்று ராஜேஸ்வரிபிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது.அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும். கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான்.
ஏற்கனவே “கஞ்சா வெச்ச கண்” எனப் பாடல் வெளியாகி உள்ளது.அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது.இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன், அபின்,… இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும்.
எதை ஒழிக்க வேண்டுமோ அதன் பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.திரைப்படத் துறையினர் மக்கள் நலன் குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும். அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும்.
நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என்று அந்த அறிக்கையில் ராஜேஸ்வரிபிரியா குறிப்பிட்டுள்ளார்.