இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை என்றபோது, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை எனவும் அவ்வாறிருக்கையில் மைசூரில் கல்வெட்டுக்களை ஏன் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
மேலும் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்னை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழக அரசுத்தரப்பில், முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
தொடர்ந்து, மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தெரிகிறது எனக்கூறிய நீதிபதிகள், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை. அவ்வாறிருக்கையில் மைசூரில் கல்வெட்டுக்களை ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சனை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறிருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென ல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? எனவும் கேல்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில், அது அரசின் கொள்கை முடிவு என பதிலளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு எனினும் ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. ஆனால் அதனதன் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும் என குறிப்பிட்டனர். தொடர்ந்து, தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எந்தெந்த பணிகளுக்கானவை? எந்தெந்த மொழிக்கு எத்தனை இடங்கள்? என்ன பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.
Advertisement: