இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் இந்திய பிரபலங்கள் இவர்கள்தான்.
இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மீகன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது.
அதன்படி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். இதேபோல் பாலிவுட் நடிகை சோனம் கபூரும் இந்த முடி சூட்டு விழாவில் பங்கேற்கிறார்.
மேலும் மும்பையை சேர்ந்த இரண்டு டப்பா வாலாக்களும் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.








