பிரதமர் மோடியின் தந்தை 1989ம் ஆண்டு மறைந்த போது நடந்த நிகழ்ச்சி குறித்து விஹெச்பி தலைவர் திலீப் திரிவேதி உருக்கமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி, பிரதமர் மோடி குறித்த தகவல் ஒன்றை தனியார் தொலைக்காட்சி பேட்டியின் போது பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், 1989ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை காலமானார். அப்போது அகமதாபாத்தில் கட்சி சார்பாக ஒரு முக்கியமான கூட்டம் இருந்தது. அப்போது பிரதமர் மோடியின் தந்தை காலமானார் என்றும், அவர் வாட்நகர் சென்றுள்ளார் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவர் கூட்டத்திற்கு வரமுடியாது என்று நினைத்தோம். ஆனால் அந்த கூட்டத்திற்கு நரேந்திரமோடி மதியம் வருகை தந்தார். அவரது தந்தையின் மறைவுக்கு பின் அவரை கூட்டத்தில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்புடைய செய்தி – பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்
மேலும், “கூட்டம் முடிந்ததும், இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றி நான் மோடியிடம் கேட்டேன். அதற்கு அவர், தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்து கூட்டத்திற்கு புறப்பட்டதாக பதிலளித்தார். கட்சிக்கான தனது பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இது ஒரு உத்வேகமான தருணம். அனைத்து தொழிலாளர்களும், நாங்கள் எங்கள் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் செய்ய அவரிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம்,” என்று திரிவேதி கூறினார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை காலமானார். தாயின் மறைவு செய்தி கேட்ட உடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு குஜராத் வந்த பிரதமர் மோடி காந்தி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
பின்னர் தனது தாயை தோளில் சுமந்து சென்று காந்திநகர் மயானத்தில் தாயின் சிதைக்கு தீமூட்டி இறுதி சடங்கு செய்தார். தன்னை பெற்றெடுத்த தாய்க்கு ஒரு நல்ல மகனாக இறுதி சடங்கினை முடிந்த உடன் பிரதமர் மோடி மக்கள் பணிகள் முடங்கி விடக்கூடாது என ஒரு பிரதமராக தனது பணிணினை மேற்கொள்ள சென்று விட்டார்.
இறுதி சடங்குகள் முடிந்த சில மணி நேரங்களிலேயே மேற்கு வங்கத்தில் பல வளர்ச்சி திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் நாட்டின் 7வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த போது, சில “தனிப்பட்ட காரணங்களுக்காக” நேரில் வராததற்கு மன்னிப்பு கேட்டார்.