தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என்றால் வாகனத்தில் என்ன ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று மும்பை காவல்துறையிடம் அஸ்வின் வினோத் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் இதுவரை 1,62,63,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,86,920 பேர் மரணமடைந்து உள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மும்பையிலும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தனியார் வாகனங்கள் முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று மும்பை காவல்துறை முன்பே அறிவுறுத்தியது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் வாகனங்கள், மருந்துகளை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் சிவப்பு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். காய்கறிகள், பழங்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் பச்சை ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.
கொரொனாவின் பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மும்பையில் வேடிக்கையான நிகழ்வும் நடந்திருக்கிறது. தனது காதலியைப் பிரிந்து வாடுவதால், அவரை சந்திக்க வாகனத்தில் எந்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று அஸ்வின் வினோத் என்பவர் மும்பை காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மும்பை காவல்துறையும் பதிலளித்துள்ளது. ’உங்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எங்கள் உடனடி தேவைகளுக்கான பட்டியலில் இந்த தேவைக்கு இடம் இல்லை. இந்த தூரம் உங்கள் காதலை அதிகப்படுத்தும் அதுபோல் மேலும் ஆரோக்கியமாக்கும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம். இது ஒரு இக்கட்டான காலகட்டம். விரைவில் கடந்துவிடலாம்’ என்று மும்பை காவல்துறை அஸ்வின் வினோத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இனி வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டத் தேவையில்லை என்றும் வாகன சோதனை மட்டும் தொடரும் என்று மும்பை காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.