திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின், மக்கள் பிரச்னைகளை தீர்க்க என்ன செய்தார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், உண்மைக்கும் வெகுதூரம் என சாடினார். தொடர்ந்துபேசிய அவர், அவரது அரசியல் மூலதனமே பொய் தான், எனவும் மேலும், திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பிரச்னைகளை தீர்க்க என்ன செய்தார்? என்றும், கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து பழனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் நலம் பெறவே அதிமுக தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவையும் அதிமுக அரசையும் விமர்சிப்பது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொடர்கதையாக போய்விட்டது, என சாடினார்.







