“பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்ன?” – முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கேள்வி!

விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவை பகிர்ந்து பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்னவென்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டியலின மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதில் என்ன? திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் பழைய வீடியோவை பகிர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்று முன்தினம் சிவகங்கையில்  ‘நீயெல்லாம் புல்லட் ஓட்டலாமா?’ என சாதி வெறியர்களால் அய்யாச்சாமி என்ற இளைஞனின் கைகள் வெட்டப்பட்ட கடுந்துயரத்தை முதலமைச்சர் கடந்து சென்றுள்ளார்.

திரைத்துறையில் இருந்தாலும் சமூக செயற்பாட்டாளராய் பா.ரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். ஆனால் திமுகவின் கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து. பட்டியலின மக்களின்  வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியில் அமர்ந்து விட்டு அவர்களுக்கு எதிராகவே காவல்துறையை வைத்து பொய் முடிச்சுகளை போடும் இந்த ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்”  என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “ நாங்கள் பேசவே கூடாது, கருத்து சொல்லவே கூடாது என்று கொக்கரிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யாருடைய வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தீர்களோ, அந்த மக்களுக்கு நீங்கள் இழைத்திருக்கிற துரோகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிற காலம் நெருங்கிவிட்டது…” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.