வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் வெளியான தகவல்!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த…

What is the cause of Wayanad landslide? Information published in the study!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, ஸ்வீடன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 விஞ்ஞானிகள் உட்பட 24 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக வானிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் குழு வயநாடு நிலச்சரிவு குறித்து ஆய்வு நடத்தியது.  விஞ்ஞானிகள் குழுவானது, வானிலை தரவு மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட காலநிலை மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது. இந்த ஆய்வில், வயநாடு நிலச்சரிவுக்கு உலக வெப்பமயமாதலே காரணம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வானிலை மாற்றங்களின் காரணமாக வழக்கமானதை விட 10 சதவீதம் தீவிர மழைப்பொழிவு பெய்ததாகவும், இந்த தீவிர மழைப்பொழிவினால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, வயநாடு பகுதியில் இருந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதும் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலச்சரிவை தடுக்கும் முக்கிய காரணியாக வனப்பகுதிகள் உள்ள சூழலில் வயநாடு மாவட்டத்தில் 62 சதவீதம் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.  அதாவது, 1950 முதல் 2018 வரை 62 சதவீத வனப்பரப்பு அழிக்கப்பட்டு, அவை தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், வயநாடு மாவட்டம் கடந்த 2012ம் ஆண்டே பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தேயிலைத் தோட்டத்தின் விரிவாக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுபக்கம் சுரங்கப் பணிகளும் தொடங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.