பிரதமர் மோடியின் மீது மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு என்ன கோபமோ என அமித்ஷாவின் பேச்சு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேலும் அணைக்கு வரும் நீரின் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், இந்த ஆண்டு 331 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால், ஜூன் மாதம் 12-ந் தேதியே, தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை மற்றும் உழவர் வாழ்வை மேம்படுத்துவதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் மூலம் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயன் அடைந்துள்ளனர். அதேபோல், இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறையில் நிறைவேற்றி இருக்கிறோம்.
தொடர்ந்து 3-வது ஆண்டாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ஆம் தேதி அன்று
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது. அந்த தண்ணீர், கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உழவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. காவிரி நீரை திறம்பட பயன்படுத்தி சாகுபடியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் நலன் காக்க இந்த அரசு எப்போதும் பாடுபடும் என எனக்கூறிய அவர், 75 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு குறுவை நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் நேற்று வேலூர் மாவட்டம் கந்தனேரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மத்திய அரசு என்ன செய்தது. அதுகுறித்து நான் எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா பதில் கூறவில்லை. தமிழ்நாட்டுக்கு என எந்த ஒரு புதிய திட்டமும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக கூறி இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. சாதனைகளை கேட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி குறித்து அமித்ஷா பேசுகிறார் என்றார்.
மேலும் தமிழர்கள் பிரதமராவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை தடுத்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் என அமித்ஷா கூறியதற்கு, மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழரை பிரதமராக்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதன் உள்நோக்கம் புரியவில்லை. அதேபோல, மோடி மீது அவருக்கு என்ன கோபமோ என தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கும் கருத்தை வரவேற்பதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஆளுநர் தமிழிசைக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா