Weather Update | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றது!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,

“தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (07-01-2026) காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில், மட்டக்களப்பு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (08-01-2026) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.