INDIA, NDA ஆகிய இரண்டு கூட்டணிகளிடம் இருந்தும் பகுஜன் சமாஜ் கட்சி விலகியே நிற்கும் என அக் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, பெங்களூருவில் 2வது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டனர்.
இந்த நிலையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒருபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியாக இருந்ததில்லை. அதே வேளையில் பாஜகவை விமர்சித்தும் உள்ளது. இருந்தும் அந்தக் கட்சி பெங்களுருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, தனது கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராது எனவும், வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட விரும்புவதாகவும், அதற்காக நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தன்னைப் போலவே சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ளது. எனவே INDIA, NDA ஆகிய இரண்டு கூட்டணிகளிடமிருந்தும் பகுஜன் சமாஜ் விலகியே இருக்கும் என மாயாவதி அறிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா