அக்டோபர் 12ம் தேதியை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.7.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அயல்நாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ்ப் பயன்பாட்டினை பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் திங்கள் 12ம் நாளினை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தொடர்ந்து நிறுவுதல், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் தமிழின் பயன்பாட்டினை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
நினைவு மண்டபங்கள் / மணிமண்டபங்களில் ஒலி/ஒளி காட்சி அமைப்பது, அதனை 360 கோணப் பரிமாணத்தில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.