அணியில் உள்ள வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 25-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுபம் கில் 43 ரன்களும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 27 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 5 வது தோல்வியை சந்தித்துள்ளது. போட்டிக்கு பின் பேசிய கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், ’இது ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் முதல் சில ஓவர்களில் மெதுவாகவே ரன்கள் சேகரிப்பைத் தொடங்கினோம். மிடில் ஆர்டரில் விரைவாக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆண்ட்ரே ரஸல் சிறப்பாக ஆடி ரன்களை 150 -க்கு உயர்த்தினார். இருந்தாலும் பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டோம். அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் அந்த திறமையை பயன்படுத்த வேண்டும். அடுத்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார்.







