“அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது” – சென்னை உயர்நீதிமன்றம்!

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனோ தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கல்லூரிகளின் இறுதி பருவத்…

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனோ தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்து.

இந்நிலையில், பல்கலைக்கழ மாணியக் குழுவுக்கு எதிராக இவ்வாறு தேர்வுகளை ரத்து செய்வது முரணானது என தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்த வழக்கு விசாரணையில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த யுஜிசி சார்பு செயலாளர் உமாகாந்த் பலுனி, அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது, அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? பல்கலைக்கழக வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 15க்கு தள்ளிவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.