தமிழ்நாடு பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் முறையாக, நேர்மையாக, நடைபெறுவதில் எங்களுக்குப் பெருமிதம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கும்பகோணத்தில்
கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலய கட்டிடப் பணிகளை இன்று பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் ப்ளூடூத் போன்ற உபகரணங்களைக் கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெறுவது தொடர் கதையாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள் குறிப்பாக இந்தி பேசுபவர்கள் இது போல் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர்.
மத்திய அரசுக்கு இது தெரிந்து நடைபெறுகிறதா? தெரியாமல் நடைபெறுகிறதா? என்று
தெரியவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற தேர்வுகளில் இது போல் முறைகேடு இல்லாமல் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவது எங்களுக்குப் பெருமிதம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலய கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.







