பல ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி கூண்டை விட்டு வெளியே பறப்பதற்கு தயாராகி விட்டது என கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“ நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகால ஆட்சியை முடித்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து
வைக்கிறார். மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி தொடாத இடங்களையும் தொட்டுவிட்டது. தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களை குறி வைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்து மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கானதாக அமைந்துள்ளது.
பெண்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 75 ஆண்டுகள் இல்லாத அளவில் மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
பாஜகவின் வெற்றி வாக்கு இயந்திரத்தை கைப்பற்றி நடந்ததாக 2014 இல் பிரச்சாரம் செய்தனர். 2019ல் அரசுத்துறை அனைத்தையும் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றதாக சொன்னார்கள். 2024ல் பாஜக பெரும் வெற்றியை வைத்து மக்களை வசியம் செய்து வெற்றி பெற்றார்கள் என சொல்ல போகிறார்கள்.
தமிழ்நாட்டில் களம் மாறிவிட்டது. 30 ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி கூண்டை விட்டு
வெளியே வர தயாராகிவிட்டது. பறப்பதற்கு சக்தி வந்துவிட்டது. கிளியால் பறக்க
முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்து விட்டது. பாஜக ஆட்சி அமையும்
என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது.
தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சி 45 சதவீதத்திற்கும் அதிகமாகவே அரசு திட்டங்கள் அமல்படுத்தியுள்ளது.
இலங்கையில் எங்கு சென்றாலும் இந்தியாவின் உதவியால் ஏராளமான பணிகள் நடந்து வருகிறது. இலங்கை நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களுக்கான திட்டத்தை இந்தியா செய்து வருகிறது. இலங்கை என்பது அண்டை நாடு அல்ல தொப்புள்கொடி உறவு தற்போது வரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
2024 ல் மறுபடியும் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார் . இளைஞர்களை தொழிலதிபராக மாற்றும் முயற்சியில் மோடி அரசு செயல்படுகிறது. இளைஞர்களை போஸ்டர் ஒட்டவைத்து கோபாலபுரத்தில் நாலாவது தலைமுறையும் முதல்வராக்கும் முயற்சியை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
தென்காசிக்கும் காசிக்கும் உள்ள சம்பந்தத்தை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தில் தனி தமிழ்நாடு என்ற நிலையை பற்றிய பேசி வருகின்றர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோமநாதர் கோவிலில் படையெடுப்பு நடந்தபோது தப்பித்து வந்தவர்கள் சௌராஷ்டிரா பிரிவினர் அவர்களையும் தமிழர்களையும் சோமநாதர் ஆலயத்தை வைத்து இணைக்கும் முயற்சியை மோடி அரசு செய்து சௌராஷ்ட்ரா தமிழ் சங்க நிகழ்ச்சியை ஏப்ரல் 19ல் இருந்து நடத்த உள்ளது அதற்கான தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
நமக்கான நேரம் வந்துவிட்டது. சில முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் அடித்தளம் உறுதியாக வேண்டும். இந்திய அரசியலில் புரட்சி இயக்கங்கள் பூத்கமிட்டி வைத்து செயல்படவில்லை. பாஜகவிடம் பூத் கமிட்டியும் உள்ளது புரட்சியும் உள்ளது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது.
பாலும் தண்ணியும் சேராது நம்முடைய பாதை தனி பாதை சிங்கப்பாதை. 2024லும் இது நடக்கும், 2026லும் இது நடக்கும். நாம் கூண்டுக்கிளி அல்ல நாம் பறப்பதற்கு தேவையான
நேரத்திற்காக காத்திருந்தோம். பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நிச்சயம் மாற்றம்
நடக்கும் ” என அண்ணாமலை தெரிவித்தார்.