கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பால்ட்சீ சிகிச்சையின் போதே இறந்துவிட்டது.
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக மீம்கள் சமீப ஆண்டுகளில் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சிரமமான காரியத்தையும் எளிமையான வடிவில் மீம் மூலம் விளங்க வைத்துவிட முடியும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். அந்த வகையில் சமீப காலங்களில் பலரையும் ஈர்த்தது சீம்ஸ் எனும் நாய். இதன் புகைப்படத்துடன் கூடிய மீம்கள் வெடிசிரிப்பை வரவழைக்கக்கூடியவை.
பால்ட்சீயின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர். அது முதல் இணையதளங்களை இந்த நாய் ஆக்கிரமித்தது. தமிழக சூழலிலும் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயை கொண்டு பல மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வந்தனர். இப்படியிருக்கக் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பால்ட்சீ நேற்று காலை சிகிச்சையின் போதே இறந்துவிட்டது. இதற்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







