இன்று முதல் அமலுக்கு வந்தது வக்ஃபு சட்ட திருத்தம்… அரசிதழ் வெளியீடு!

திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட வக்ஃபு சட்ட மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல மணி நேர விவாதங்களுக்கு பிறகு இரு அவைகளிலும் அடுத்தடுத்த நாட்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து திருத்தப்பட்ட வக்ஃபு மசோதா சட்டமாக மாறியது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அரசிதழில் திருத்தப்பட்ட வக்ஃபு சட்ட மசோதா இன்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட, திருத்தப்பட்ட வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் வரும் 16ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.