திடீரென மேடையில் மயங்கி விழுந்த விஷால்… இதுதான் காரணமா?

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெறும்.
இதனை முன்னிட்டு சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை அழகி நேற்று போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட நடிகர் விஷால் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கையசைத்து திருநங்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். இதனைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கி, குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது புகைப்படம் எடுக்க நின்று கொண்டிருந்த நடிகர் விஷால், திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்து கீழே சரிந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த திருநங்கைகள், மயங்கி சரிந்த நடிகர் விஷாலை தாங்கி பிடித்து விழா மேடையிலேயே கீழே படுக்க வைத்தனர். இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனமும், மருத்துவக்
குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவக்
குழுவினர், மயங்கி கிடந்த நடிகர் விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மயக்கம் தெளிந்து நடிகர் விஷால் எழுந்தார்.

இதனையடுத்து மிகவும் சோர்வுடன் காணப்பட்ட நடிகர் விஷாலை அவருடன் வந்திருந்தவர்கள் கைத்தாங்களாக பிடித்து அழைத்து சென்று காரில் ஏற்றி சென்னைக்கு அழைத்து சென்றனர். நடிகர் விஷால், திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்,“நடிகர் விஷால் நன்றாக இருக்கிறார். சரியாக சாப்பிடாதது, கூட்டம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. டாக்டரிம் செக் செய்து விட்டோம்.
இப்போது விஷால் நன்றாக இருக்கிறார்” என நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.