ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரும் புது மாப்பிளையுமான மேக்ஸ்வெலுக்கு அந்த அணி சார்பாக பார்ட்டி (புதிதாக திருமணம் ஆனதற்காக) வைக்கப்பட்டதில், சமந்தாவின் பாட்டுக்கு கோலி மிகவும் உற்சாகத்துடன் நடனமாடிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிங் கோலி.. என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது சோதனை காலம். ஒரு காலத்தில் அடுத்தடுத்து சதமடித்து வந்த கோலியின் பேட் சமீப காலமாக டக் அவுட்களை அதிகம் கொடுத்து வருகிறது. 2019 உலக கோப்பை, 2021 டி-20 உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐ.பி.எல் என்று எந்த போட்டியிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் இந்திய அணி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
‘தலைவனுக்கு இனி பிரஸர் இல்ல. இனி ஆட்டத்தை பாருங்க..’ என்று கோலியின் கம் பேக்குக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், அவரது மோசமான ஃபார்ம் தொடர்வது ரசிகர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் கோலி பெரிதாக சோபிக்கவில்லை.
சீஸனின் தொடக்கத்தில் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஓன் டவுனில் இறங்கிக் கொண்டிருந்தார். அது பலனளிக்காததால், கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கோலி மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கினார். அந்தப் போட்டியிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
இதனால், கோலி மீது பல்வேறு இடங்களில் இருந்தும் விமர்சனங்கள் பாய்ந்து வருகின்றன. டி-20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ‘அணியின் நலனுக்காக கோலியை நீக்க வேண்டும்.’ என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மூத்த வீரர்கள் சிலர், “கோலிக்கு ஓய்வு தேவை.. அவருக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் விளையாட வைக்கலாம்.” என்று ஆலோசனை கூறி வருகின்றனர்.
இதையடுத்து எதிர்வரும் தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எதிரான தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கலாமா என்று பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை களேபரங்களுக்கு நடுவே, ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரும் புது மாப்பிளையுமான மேக்ஸ்வெலுக்கு அந்த அணி சார்பாக பார்டி (புதிதாக திருமணம் ஆனதற்காக) வைக்கப்பட்டது.
இதில் கோலி மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். பார்டியில் பாடல்கள் ஒளிபரப்பி நடனமும் ஆடினர். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின், சமந்தா நடனத்தில் வைரலான ‘ஓ.. அன்டவா..’ (தமிழில். ம் சொல்றியா மாமா) பாடல் போடப்பட்டது. அப்போது கோலி சக ஆர்.சி.பி வீரரான ஷபாஸ் அகமதுடன் இணைந்து நடனமாடினார். அப்போது அனுஜ் ராவத், ஃபின் ஆலன் உள்ளிட்ட சக ஆர்.சி.பி வீரர்களும் உடனிருந்தனர்.
கோலியின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் கோலியின் மோசமான ஃபார்மால் கடுப்பாக இருக்கும் ரசிகர்கள், “நம்ம இருக்கற நிலைமைக்கு இதெல்லாம் தேவை தானா கோபி..” என்று கலாய்த்தும் வருகின்றனர்.