இந்தியா – இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி சதமடித்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்களில் விளையாடுகிறது. அதன்படி நடைபெற்ற டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறன. அந்த வகையில், முதலாவது ஒருநாள் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 373 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள், ரோகித் ஷர்மா 83 ரன்கள், சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கையின் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
இந்த போட்டியில் சதமடித்ததன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது 44வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில், இது விராட் கோலியின் 73வது சதமாகும். இன்று அடித்த சதத்தின்மூலம், ஒருநாள் போட்டிகளில், இந்தியாவில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.