உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை தொடர்பாக 227 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா அந்தப் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். எனினும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வன்முறை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பகா 227 பேரை போலீஸார் கைது செய்தனர். மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.
இதுகுறித்து அந்த மாநில காவல் துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கைது செய்யப்பட்டவர்களில் 68 பேர் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 50 பேர் ஹத்ராஸ் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். சஹரன்பூரில் இருந்து 48 பேர், அம்பேத்கர்நகரிலிருந்து 28 பேர், மொராதாபாத்தில் இருந்து 25 பேர், ஃபிரோசாபாத்தில் இருந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கிய உத்தரவுகளில், ஒரு நாகரிக சமூகத்தில் சமூக விரோத சக்திகளுக்கு இடம் இல்லை. அப்பாவிகள் யாரும் துன்புறுத்தப்படக் கூடாது. அதேநேரம், குற்றவாளிகளில் ஒருவர் கூட தப்பிவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் மிரித்யுஞ்செய் குமார் ஹிந்தியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பிறகும் சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக சிலர் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு பிரயாக்ராஜ், சஹரன்பூர் உள்ளிட்ட இடங்களில் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது. சமூக விரோதிகள் சிலர் பிரயாக்ராஜ் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். சிலர் போலீஸ் வாகனத்துக்கும் தீ வைக்க முயற்சி செய்தனர். இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர்.
இந்த வன்முறையில் ஒரு போலீஸார் காயமடைந்தார். சஹரன்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் நுபுர் சர்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
-மணிகண்டன்