‘பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது’ – ஒவைசி!

“மத்திய அரசு உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது” என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.  ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில் எம்பி…

“மத்திய அரசு உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது” என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில் எம்பி அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் பழி வாங்கும் தோரணையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

டெல்லியில் உள்ள எனது வீட்டில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேச பிரச்சாரத்திற்கு செல்லும் என் மீது 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சதிச் செயல் தொடர்பாக இதுவரை யாரையுமே போலீசார் கைது செய்யவில்லை. அசாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 40 சதவீதத்தை கடந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கு 34 சதவீதம் மட்டுமே முஸ்லீம்கள் உள்ளனர். மத்திய அரசு உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு தொடர்கிறது. மகாராஷ்டிராவில் மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. என்னை கொல்லப்போவதாக தொலைபேசி, குறுஞ்செய்திகள் மூலம் மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.