விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில், 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினர். சாராய வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச் சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.