விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருக்கான நேரம் வரும் வரை அவர் காத்திருந்தார் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் – பிரைடே பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சிவா
மாதவ் இயக்கத்தில், இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ் நடிக்கும் புதிய படம் 3.6.9. இத்திரைப்படம் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள உலக சாதனை படம். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் சுப்பிரமணியன் சிவா, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தீனா, “கணக்கிட்டு வாழ்பவன் வெற்றி பெற முடியும். இது அறிவியல் சார்ந்த திரைப்படம். வெளிநாட்டில் அறிவியல் சார்ந்த படங்கள் வெற்றிகரமானதாக இருக்கும். கே.பாக்யராஜ் இந்த படத்தில் நிச்சயம் வெற்றி அடைவார். அவர் எப்போதும் நல்ல விஷயங்களுக்கு போராடி கொண்டே இருப்பவர். இது போன்ற படங்களுக்கு இசை அமைப்பது சற்று மாறுபட்டது. இதை நேர்த்தியான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் கே.பாக்யராஜ், “இந்த படத்துக்காக உழைப்பை விட, இவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான் பெரியது. இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தான் ஹீரோ போல இருக்கிறார். சில நல்ல விஷயங்களில் நான் பிடிவாதமாக தான் இருப்பேன். என் மனதில் இந்த கிளைமாக்ஸ் நன்றாக வரவேண்டும் என்று நினைத்து நான் பிடிவாதம் பிடித்தேன். அது சரியாகவும் இருந்தது.
பாண்டியராஜன் சொன்னது போல எனக்கு 180 டிகிரி பற்றியெல்லாம் தெரியாது. சினிமாவில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு தான் வர வேண்டும் என்றால் யாராலும் முடியாது. அதற்கு ஆயுளும் பத்தாது. மனிதன் என்னவெல்லாம் கற்பனை செய்கிறானோ அது ஒரு நாள் விஞ்ஞானமாக வரும் என்பது தான் எல்லோரும் ஒத்துக் கொண்ட சமாச்சாரம்.
நடிகர் விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவருக்கான நேரம் வரும்
வரை காத்திருந்தார். சரியான நேரம் வரும் போது தான் எல்லாம் சரியாக அமைந்தது.
அது வரை தனக்கான உழைப்பை விக்ரம் கொடுத்து கொண்டே இருந்தார். அது போல உங்கள் உழைப்பை நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்.