நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு ஜூலை 10ஆம் தேதியுன் நிறைவடைந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், தேர்தலின் போது பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் மாணவர்கள் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இதனையடுத்து விஜய் அரசியலில் குதிக்க முன்னோட்டம் பார்க்கிறார் என செய்திகள் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இரண்டாவது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜய், பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை நிறைவடைந்தவுடன் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.