நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ படம் மூலம் நடிகராக களமிறங்கினார். சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
’பாரம்’ படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் தொடங்குவது தள்ளிப் போனது. இதற்கிடையே அவர் நீக்கப்பட்டு, ’ஆள்’, ’மெட்ரோ’, விஜய் ஆண்டனியின் ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே இப்போது இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இசை அமைப்பாளரில் இருந்து நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் என அடுத்தக் கட்டங்களுக்குத் தொடர்ந்த விஜய் ஆண்டனி, இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். தனது பிறந்த நாளான இன்று (ஜூலை 24, 2021) அவர் இதை அறிவித்துள்ளார்.
’இயக்குநராக வேண்டும் என்ற என் நீண்டகால கனவு இப்போது நனவாகிறது. இந்த புதிய அவதாரம் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நான் நடித்த ஒவ்வொரு படத்திலும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிட மிருந்து நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது நன்மை தான். என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நன்றி. இதில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேசி வருகிறோம். இதில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கிறேன்’ என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.








