முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த 18ம் தேதி அவரது வீடு உள்ளிட்ட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், 4.87 கிலோ தங்கம், 24 லட்சம் ரூபாய் பணம், 138 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் இடங்களை பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்டுள்ள சரவணன் மற்றும் சந்திரசேகரின் வீட்டில் மீண்டும் சோதனையிடுவதற்கான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.







