குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதனிடையே தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 5ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, ஜூலை 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலனை ஜூலை 20, திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடு அரசியல் அனுபவம் நிறைந்தவர். மாநிலங்களவையை சாமர்த்தியமாக வழிநடத்துவதில் கைதேர்ந்தவர். இந்த நிலையில் மீண்டும் வெங்கய்ய நாயுடு தொடர்வாரா அல்லது பாஜகவின் சார்பில் புதிய வேட்பாளர் தேர்ந்தெடுப்பாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அதுபோலவே, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்ற கேள்விகளும் முளைத்துள்ளன.







