கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர். சுமார் 1200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பணியாற்றியுள்ளார். தமிழில் மறுபடியும், பூவே உனக்காக, திருடா திருடி, அருந்ததி, மகதீரா. பாகுபலி உட்பட பல படங்களில் இவர் நடன அமைப்பு பேசப்பட்டது. ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் நடித்த ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடனம் அமைத்ததோடு, சில படங்களில் நடித்தும் இருக்கிறார். பாலாவின் பரதேசி, சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், தில்லுக்கு துட்டு 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவச் செல்வுகளை கவனிக்க முடியவில்லை என்று சினிமா பிரபலங்களிடம் அவர் மகன் அஜய் கிருஷ்ணா, உதவி கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து நடிகர் தனுஷ், தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி, இந்தி நடிகர் சோனு சூட் உட்பட பலர் அவருக்கு உதவினர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் இன்று உயிரிழந்தார். அவர் மறைவு திரையுலகினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவசங்கர் மாஸ்டரின் மூத்த மகன் விஜய் சங்கரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கர் மாஸ்டரின் மனைவி சுகன்யா, கொரோனா காரணமாக வீட்டிஒல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.