35 ஆண்டுகளாக சிறையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த 1987ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் சத்தியமங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசின் விதிமுறைக்கு உட்பட்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.